#BREAKING : 9, 10ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் இனி 3 மொழிகள் படிப்பது கட்டாயம்!

 
cbse exams

மத்திய கல்வி வாரியம் வெளியிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் கட்டாய மும்மொழி திட்டம் ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளது.

சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்ட பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை இனி முற்றிலும் கட்டாயமாக்கப்படுகிறது . இதன்படி, மாணவர்கள் தங்களது வழக்கமான பாடங்களுடன் சேர்த்து இனி மூன்று மொழிகளை கற்றுக்கொள்வது அவசியமாகும். ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்த புதிய கல்வி சீர்திருத்த நடைமுறை, மாணவர்களிடையே பன்மொழி திறனை வளர்க்க பெரிதும் உதவும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த புதிய விதியின்படி, மாணவர்கள் தேர்ந்தெடுத்து படிக்கும் 3 மொழிகளில், குறைந்தபட்சம் 2 மொழிகள் கண்டிப்பாக ஏதேனும் இரு இந்திய மொழிகளாக (உள்நாட்டு மொழிகள்) இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மாணவர்களின் தேர்வுச் சுமையைக் குறைக்கும் வகையில் ஒரு முக்கியச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மும்மொழி கொள்கையின் கீழ் மாணவர்கள் தேர்வு செய்யும் 3-வது மொழிக்கு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (Board Exam) கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுத்தேர்வு இல்லாத அந்த 3-வது மொழிக்கான தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு முறைகளை (Assessment) அந்தந்த பள்ளிகளே உள்முகமாக (Internal Assessment) நடத்தும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ அமைப்பின் இந்த அதிரடி மாற்றம் கல்வி உலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.