#BREAKING : செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவு..!!

 
senthil balaji

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் சுமார் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் 397 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் அணி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 

டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒரே விலையை குறிப்பிட்டதால் தான் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெறும் யூகத்தின் அடிப்படையிலானவை என்றும் அரசியல் உள்நோக்கத்தோடும், விளம்பர நோக்கத்தோடும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதில் அப்போதைய மின்துறை அமைச்சா் செந்தில்பாலாஜி, டான்ஜெட்கோ தலைவா் ராஜேஷ் லக்கானி ஆகியோருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன. இந்த முறைகேடு தொடா்பாக வழக்குப்பதிவு செய்து உயா்நீதிமன்றக் கண்காணிப்பில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனா். இந்த வழக்கு விசாரணையின்போது அரசு மற்றும் மனுதாரா்கள் தரப்பில் இறுதிக்கட்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியிடப்பட்டது. அதில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.