ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி.. மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரம்..

 
நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம்  ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் உள்ள ஆசிரம வேத பாடசாலையில், ஏராளமான  மாணவர்கள் தங்கியிருந்து அர்ச்சகருக்கு பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 13), ஆந்திராவை சேர்ந்த அபிராம் (13), மன்னார்குடியை சேர்ந்த ஹரி பிரசாத் (14), கோபாலகிருஷ்ணன் (12) ஆகிய 4 மாணவர்களும்  சுற்றுலா பயணிகள் தங்கும் இடமான யாத்திரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

dead

இன்று காலை 6 மணி அளவில்  குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.  இதனையடுத்து  சுழலில் சிக்கி  ஆற்று தண்ணீரில்  இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் கோபாலகிருஷ்ணன் மட்டும் நல்வாய்ப்பாக தட்டுத்தடுமாறி தப்பி கரைக்கு வந்து சேர்ந்துள்ளார். பின்னர்   சக   மாணவர்கள் 3 பேரும்  நீரில் மூழ்கியது குறித்து பாட சாலைக்குச் சென்று தெரிவித்துள்ளான். அதன்பேரில் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த  25 பேர் வீரர்கள் வெள்ளத்தில் மூழ்கிய  மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  அப்போது மன்னார்குடியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.  

இதனைத்தொடர்ந்து  மற்ற இரண்டு மாணவர்களையும் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். நீரில் மூழ்கிய நான்கு மாணவர்களுக்கும் நீச்சல் தெரியாது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து   கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய சிறுவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்த ஆட்சியர் பிரதீப் குமார்,  தேடுதல் பணிக்காக முக்கொம்பு மேல் அணையில் இருந்து, கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் நீர் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று   தெரிவித்துள்ளார்.