திமுக, தவெக இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் - விளாசும் அண்ணாமலை!
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை: சட்டசபையில் சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிப்பது குறித்து திமுக எம்எல்ஏ உதயநிதி பேசிய சில நாட்களிலேயே, அவரது கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து தவெக எம்எல்ஏ முஸ்தபா கருத்து தெரிவித்தார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்லாமல், தர்மத்தின் மீது, அவர்கள் தங்கள் மனதில் எந்த அளவு வெறுப்பை வளர்த்து வைத்துள்ளனர் என்பதையும் இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மிக குறுகிய காலத்திலேயே திமுக, தவெக ஆகிய இரு கட்சிகளும், ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை மக்களுக்கு நிரூபித்துக் காட்டியுள்ளன. சனாதன ஹிந்து தர்மத்தின் மீது தாங்கள் தொடர்ந்து தொடுத்து வரும் தாக்குதல்கள், தங்களை எந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளன என்பதை திமுக மறந்துவிட்டது. தவெகவும் விரைவில் அதை உணரும்.
திமுகவோ அல்லது தவெகவோ தங்கள் கொள்கையில் உறுதியான துணிச்சலைக் கொண்டிருந்திருந்தால், சனாதன ஹிந்து தர்மத்தை இலக்காகக் கொள்வதே தங்கள் அரசியலின் மையமாக இருக்கும் என்பதைத் தங்கள் தேர்தல் பிரசாரங்களின்போதே அவர்கள் வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, அவர்கள் மதச்சார்பின்மை மற்றும் நாடகத்தன்மைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டனர்.
தற்போது எந்த மக்களின் நம்பிக்கையை அவர்கள் ஆணவத்துடனும், எந்தவித அச்சமுமின்றியும் அவமதிக்கிறார்களோ, அதே மக்களிடம் ஓட்டுகளை பெற்ற பின்னரே தங்கள் உண்மையான நோக்கங்களை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.சனாதன ஹிந்து தர்மம் என்பது நீங்கள் குத்துவதற்குப் பயன்படுத்தும் ஒரு 'பஞ்சிங் பேக்' அல்ல! இவர்களின் இத்தகைய கருத்துக்களுக்கு, நம் மக்கள் தகுந்த பாடம் புகட்டாமல் விட்டுவிடமாட்டார்கள் என்று நான் உளமார நம்புகிறேன்.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

