பாஜ இளைஞர் அணி தலைவர் கொலை வழக்கு: 6 பேருக்கு துாக்கு..!

 
1

கர்நாடக மாநிலம், கொப்பால் மாவட்டம், கங்காவதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் குருபர், 32. இவர், கங்காவதி நகர பாஜ இளைஞர் அணி தலைவராக இருந்தார்.

2025, அக்டோபர் 8ம் தேதி நள்ளிரவு, வெங்கடேஷ் குருபர் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். காரில் பின் தொடர்ந்த சிலர், அவரது பைக் மீது மோதி கீழே தள்ளினர். பின் வெங்கடேஷை, அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பியோடினர்.

வெங்கடேஷ் கொலை தொடர்பாக, ரவி, 29, மைலாரி, 28, தன்ராஜ், 28, பீமா, 26, சலீம், 30, கங்காதர் கவுளி, 29, ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.இவர்களுக்கும், கொலையான வெங்கடேஷுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கொலை சம்பவத்துக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன், மாருதி என்ற இளைஞர் மீது கல்லை போட்டு கொலை செய்ய, சிலர் முயற்சித்தனர். அதில் ரவி உட்பட சிலருக்கு தொடர்பிருந்தது. இதை நேரில் பார்த்த வெங்கடேஷ், போலீசாரிடம் சாட்சியம் அளித்தார். மாருதியின் சிகிச்சைக்கும் உதவியாக இருந்தார். எனவே, வெங்கடேஷை கொலை செய்ததாக, குற்றவாளிகள் ஒப்புக்கொண்டனர். விசாரணையை முடித்த போலீசார், கங்காவதி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில், 927 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், நீதிபதி சதானந்த நாகப்பா, ''சமுதாயத்தில் இத்தகைய கொடூர செயல்களை சகிக்க முடியாது. குற்றவாளிகள் இதற்கு முன்னரும், பல குற்றங்களில் தொடர்பு கொண்டுள்ளனர். எனவே, ஆறு பேருக்கும் துாக்கு தண்டனை, தலா 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது,'' என, தீர்ப்பளித்தார்.அபராத தொகையை, கொலையான வெங்கடேஷின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக வழங்கும்படியும், நீதிபதி உத்தரவிட்டார்.