தடையை மீறி ஆர்ப்பாட்டம் - குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது
அண்ணா பல்கலை. மாணவிக்கு நீதி கேட்டு பாஜக மகளிரணி பேரணியில் ஈடுபட்டனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஆளுநரை சந்தித்தார்.
இந்நிலையில் அண்ணா பல்கலை. வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரையில் தடையை மீறி பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட்னர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை காவல்துறை கைது செய்தது. பேரணிக்கு அனுமதி தருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை, பேரணிக்கு அனுமதி தர மாட்டார்கள் என்பது தெரியும் என போலீஸ் வாகனத்தில் ஏறும்போதே குஷ்பு கூக்குரலிட்டார். இதேபோல் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டு பாஜக மகளிர் அணியினர் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மிளகாய் வற்றலை இடித்து கண்ணகி சிலைக்கு பூசியும், கையில் சிலம்புடன் கண்ணகி வேடமிட்ட பெண் நீதி வேண்டும் என முழக்கமிட்டபடியும் பாஜக மகளிரணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.