இந்துக்களை தாக்கி பேசினால் திமுகவின் வாக்கு வங்கி தானாக உயரும் என்ற மட்டமான அரசியல் கணக்கா?- வானதி சீனிவாசன்

தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைக்க முயலும் ஒவ்வொரு நாடகமும் தோல்வியடையும் பொழுது, இந்துக்களையும் அவர்களின் நம்பிக்கைகளையும் கேலிப்பொருளாக்கும் திமுக-வின் பரம்பரை குணம் எப்பொழுது தான் மாறும்? என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “எதற்கு இந்த இரட்டை வேடம் திரு. ஆ.ராசா அவர்களே? நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரிகள் இல்லையென தேர்தல் பிரச்சார மேடைகளிலும், “நெற்றியில் பொட்டு வைத்து, கையில் கயிறு கட்டினால் நீயும் சங்கியாகி விடுவாய்” என கட்சி மேடைகளிலும் மாற்றி மாற்றிப் பேசி மக்களை உங்கள் திராவிட மாயையில் மூழ்கடிப்பது ஏன்? இந்துக்களைத் தாக்கிப் பேசினால் திமுக-வின் வாக்கு வங்கி தானாக உயரும் என்ற மட்டமான அரசியல் கணக்கா? அதுவும் “பொட்டு வைக்காதே” என வளரும் இளம் தலைமுறையினரை உசுப்பி அவர்களிடையே இந்து மதத்தின் மீதான வெறுப்புணர்வை விதைத்து நீங்கள் என்ன சாதிக்கப் பார்க்கிறீர்கள்?
“மத நல்லிணக்கம்” என்ற பெயரில் மற்ற மதத்தினரிடம் சகோதரத்துவத்தைப் பேணும் உங்கள் திமுக அரசு, இந்துக்களை மட்டும் மாற்றாந்தாய் மனப்போக்குடன் கையாளுவது ஏன்? இந்துக்கள் மீது அப்படியென்ன தீராப் பகை? தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைக்க முயலும் ஒவ்வொரு நாடகமும் தோல்வியடையும் பொழுது, இந்துக்களையும் அவர்களின் நம்பிக்கைகளையும் கேலிப்பொருளாக்கும் திமுக-வின் பரம்பரை குணம் எப்பொழுது தான் மாறும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.