நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக மாநில இளைஞரணி செயலாளர் கைது

 
bjp

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தனியார் கிரஷர் ஆலையில் நன்கொடை கேட்டு தராததால் கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில இளைஞரணி செயலாளரை போலீசார் கைது செய்தனர்.

Image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலன் புதுக்குளம் பகுதியில் கிருஷ்ணா ப்ளூ மெட்டல்ஸ் என்ற தனியார் கிரஷர் ஆலை செயல்பட்டு வருகிறது.  இந்த ஆலைக்கு சென்ற சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதி ராஜா உள்ளிட்ட சிலர் நன்கொடை கேட்டதாக கூறப்படுகிறது.  அப்போது அங்கு பணியில் இருந்த கிரஷர் ஆலை மேலாளர் நவீன்குமார் என்பவர் பூபதி ராஜாவிடம் தங்களது நிறுவன உரிமையாளர் வெளியே சென்றுள்ளதாகவும், நிறுவன உரிமையாளர் வந்த பின்னர் அவரிடம் பேசிக்கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த பூபதி ராஜா மற்றும் அவருடன் வந்த சிலர் அந்த நிறுவனத்தின் நுழைவு வாயிலில் தாங்கள் வந்த 2 சொகுசு கார்களை நிறுத்தி அங்கு வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு பணியில் இருந்த மேலாளர் நவீன்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மேலாளர் நவீன்குமார் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் 506/1, 341, 294/பி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பூபதி ராஜாவை கைது செய்தனர். பின்னர் அவரை சொந்த ஜாமினில் விடுதலை செய்தனர். மேலும் கிரஷரின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பூபதி ராஜாவின் கார் மற்றும் பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் பாலவிக்னேஷ் ஆகிய இருவரின் சொகுசு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

இதற்கிடையில், காரில் சென்று கொண்டிருக்கும்போது கிரசரில் இருந்து சென்று கொண்டிருந்த லாரியில் இருந்து கீழே விழுந்த கல்  கார் மீது பட்டு உடைந்ததாகவும், அதனால் காருக்கான சேதார பணத்தைக் கேட்க சென்ற இடத்தில் தகராறு ஏற்பட்டதாகவும் கூறி பாஜக மாநில இளைஞர் அணி செயலாளர் பூபதி ராஜா காவல் நிலையத்தில் கிரஷர் ஆலைக்கு எதிராக அளித்த புகார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.