பாஜகவினர் அதிர்ச்சி..! பிரதமர் மோடி தனது பொறுப்பிலிருந்து விலக வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி..!

 
1
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எக்ஸ் தளத்தில் பதிவித்துள்ளதாவது,  ”நரேந்திர மோடி தலைமையிலான பாஜக, மக்களவைத் தேர்தல் வெற்றி வாய்ப்புக்குத் தேவையான 272 தொகுதிகளை விட குறைவாகவே பெற்றுள்ளதால், அவர் பொறுப்பிலிருந்து விலக வேண்டும். சுயமரியாதையுடைய எந்த தலைவரும் தாமாக முன்வந்து ராஜிநாமா செய்வார். மற்றவர்கள் வெளியேற்றுவதற்காக காத்திருக்கமாட்டார்” என அவர் பதிவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டும் வெற்றி கண்டது. தனித்து ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால், கூட்டணியுடன் சேர்ந்து பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு தெரிவித்துள்ளது குறித்து சமூக வலைதளத்தில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

”சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது. ராஜீவ் காந்தி இதே இடத்தில் இருந்திருந்தால் அவருக்கும் இந்த கருத்தை தெரிவிப்பாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ”ஆம். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழக்கும்போது ராஜீவ் காந்தி ராஜிநாமா செய்தார். பெரும்பான்மைக்காக சிறிய கட்சிகளிடம் மன்றாடவில்லை” என அவர் பதிலளித்துள்ளார்.