கள்ளச்சாராய விவகாரம் - தமிழகம் முழுவதும் பாஜக இன்று ஆர்ப்பாட்டம்!

 
bjp

கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை கண்டித்து தமி்ழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாக விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் இரண்டு காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் தொடர்பான அதிரடி வேட்டை நடத்தப்பட்டு சுமார் 3000 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை பொருட்களை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் உயிரிழந்ததை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக பாஜக மாநில மகளிர் அணி சார்பில் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  சென்னையில் ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.