லஞ்சம் கொடுத்த மரிய வில்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- நயினார் நாகேந்திரன்

 
நயினார் நாகேந்திரன்

முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களுக்கு, லஞ்சம் கொடுத்ததை பகிரங்கமாக சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்ட தற்போதைய நிதியமைச்சர் திரு. மரிய வில்சன் மீதும் முன்னாள் கல்வியமைச்சர் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம்! இரு தரப்பினர் மீதும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!  முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களுக்கு, லஞ்சம் கொடுத்ததை பகிரங்கமாக சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்ட தற்போதைய நிதியமைச்சர் திரு. மரிய வில்சன் மீதும் முன்னாள் கல்வியமைச்சர் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

லஞ்சம் கேட்டவர் மீது திரு. மரிய வில்சன் அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி எவ்வித புகாரும் அளிக்காமல், இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கூறி விளம்பரம் தேடுவதன் அவசியம் என்ன? குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்கும் வகையில் திரு. மரிய வில்சன் அவர்களின் கல்வி நிறுவனத்தில் என்ன சட்டரீதியான குறைபாடுகள் உள்ளன? தனது தனிப்பட்ட நலனுக்காக லஞ்சம் கொடுத்து, தனது காரியத்தை முடித்துக் கொள்ளும் குணநலன் கொண்ட திரு. மரிய வில்சன் அவர்களை முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தினால், அரசு இயந்திரம் எப்படி நேர்மையாக இயங்கும்? 

எனவே, ஒப்புதல்கள் அல்லது அனுமதிகளைப் பெற ஒரு அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுத்ததற்காக ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 8, ஊழல் செயலுக்குத் துணை போனதற்காக பிரிவு 12, சட்ட நடைமுறைகளைத் தவிர்ப்பதற்காக லஞ்சம் வழங்கியதற்காக BNS-இன் பிரிவு 61 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், திரு. மரிய வில்சன் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, சமரசமின்றி முறையாக விசாரிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை, திரு, மரிய வில்சன் அவர்களை அமைச்சரவையில் இருந்து முதல்வர் திரு. 
விஜய் அவர்கள் நீக்க வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.