வெற்றிக் கழகமா அல்லது வெற்று வாக்குறுதிக் கழகமா?- நயினார் நாகேந்திரன்
வெற்றிக் கழகமா அல்லது வெற்று வாக்குறுதிக் கழகமா திரு. விஜய் அவர்களே? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “வெற்றிக் கழகமா அல்லது வெற்று வாக்குறுதிக் கழகமா திரு. விஜய் அவர்களே?தேர்தல் பிரச்சாரத்தில் 24 மணிநேரமும் தங்குதடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்று கூறிவிட்டு, ஆட்சி அமைத்ததும் கணக்கில்லாமல் கரண்ட்டை துண்டித்து தமிழக மக்களை அவதிக்குள்ளாக்கினீர்கள்! முதலில் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம் என்று கூறிவிட்டு, பின்னர் 500 யூனிட்டுக்குள் பயன்படுத்தினால் மட்டும் தான் இலவசம் என்று இக்கு வைத்தீர்கள்!அன்று மாதம் ஒரு முறை மின்கட்டணம் என்று சொன்னீர்கள், ஆனால் இரண்டு மாதங்களே ஆகப்போகிறது, இன்னும் கணக்கீட்டுக்கான அறிவிப்பே காணவில்லை!
இதுபோதாததற்கு, மின்சாரத்துறை மின்வெட்டுத் துறையாக உருமாறி வரும் வேளையில், அதனைக் கண்டுகொள்ளாமல், ரீல்ஸுக்கு முட்டுக் கொடுத்தும், திருப்பரங்குன்றம் தீபத்தூணை இருளில் மூழ்கடிக்கவும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் உங்கள் அமைச்சர் திரு. நிர்மல்குமார் அவர்கள்! மொத்தத்தில் இது குதிரை வேக அரசாங்கம் அல்ல! போங்காட்ட அரசாங்கம் என்பது தெளிவாகிறது! மக்களுக்கு இப்படி பன் கொடுப்பதை விடுத்து, கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுங்கள் முதல்வரே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

