ஓட்டுக்காக தேசத்தைக் கூறுபோட முயலும் திமுக- நயினார் நாகேந்திரன்
புதுக்கோட்டையில் நடைபெற்ற கட்சி நிகழ்வில், தேசத்தை இரண்டாகப் பிளக்கும் நோக்கத்தில் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “புதுக்கோட்டையில் நடைபெற்ற கட்சி நிகழ்வில், தேசத்தை இரண்டாகப் பிளக்கும் நோக்கத்தில் திமுக அமைச்சர் திரு. ராஜகண்ணப்பன் அவர்கள் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இதுநாள் வரை பாரத குடிமக்களை, வடக்கு தெற்கு எனப் பிரித்து, வடமாநிலத்தவர்கள் என்று ஒரு சாராரை இழிவாகப் பேசிய திமுக தலைவர்கள், தற்போது ஒரு படி மேலே சென்று பாரத தேசத்தையே இரண்டாகப் பிளக்கும் நோக்கில் பேசியிருப்பது திமுகவின் பிரிவினைவாதப் போக்கைப் பட்டவர்த்தனமாக்கியுள்ளது. அதிலும், அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டு இந்திய இறையாண்மையைச் சிதைக்கும் வண்ணம், பொதுவெளியில் பேசிய அமைச்சர் திரு. ராஜகண்ணப்பன் அவர்கள் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
தொடர்ந்து இந்திய இறையாண்மையைச் சிதைத்து, தேச ஒற்றுமையைக் குலைத்து, பிரிவினைவாதத்தை விதைத்து ஓட்டுப் பிச்சை எடுக்கும் திமுக, தமிழக மக்களால் வேரோடு பிடுங்கி எறியப்படும் நாள் தொலைவிலில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.


