நவீன் மரணத்திலும் காவல்துறையினரின் கை ஓங்கி இருக்குமோ என சந்தேகம்”- நயினார் நாகேந்திரன்
சில தினங்களுக்கு முன்பு காவலர்களால் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட திரு. அஜித்குமார் வழக்கு போன்று திரு. நவீன் மரணத்திலும் காவல்துறையினரின் கை ஓங்கி இருக்குமோ என்ற பலத்த சந்தேகம் மக்கள் மனதில் எழுகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “திருமலா பால் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கொளத்தூர் துணை ஆணையர் திரு. பாண்டியராஜன் அவர்களால் சட்டவிரோதமாக விசாரிக்கப்பட்டு வந்த திருமலா நிறுவனத்தின் மேலாளர் திரு. நவீன் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவரும் அதிர்ச்சி செய்திகள், நம்பும்படியாக இல்லை. சில தினங்களுக்கு முன்பு காவலர்களால் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட திரு. அஜித்குமார் வழக்கு போன்று திரு. நவீன் மரணத்திலும் காவல்துறையினரின் கை ஓங்கி இருக்குமோ என்ற பலத்த சந்தேகம் மக்கள் மனதில் எழுகிறது.
திருமலா பால் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கொளத்தூர் துணை ஆணையர் திரு. பாண்டியராஜன் அவர்களால் சட்டவிரோதமாக விசாரிக்கப்பட்டு வந்த திருமலா நிறுவனத்தின் மேலாளர் திரு. நவீன் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவரும் அதிர்ச்சி செய்திகள், நம்பும்படியாக இல்லை. சில…
— Nainar Nagenthiran (@NainarBJP) July 10, 2025
காரணம், புகார் கொடுத்து இரண்டு வாரங்கள் கழித்தும் முறையாக வழக்குப் பதிவு செய்யாமல் திரு. நவீனை விசாரித்த காவல்துறை, குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் குடும்பத்தினரையும் இவ்வழக்கில் சேர்த்து விடுவோம் என மிரட்டியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சட்டம் ஒழுங்கைத் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்குவதாக மார்தட்டிக் கொள்ளும் மாண்புமிகு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது சொந்தத் தொகுதியில் நடந்துள்ள காவல்துறையின் அத்துமீறல்களை என்ன சொல்லி மடைமாற்றப் போகிறார்? எனவே, காவல்துறையினரின் தொடர் அழுத்தம் காரணமாக திரு. நவீன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரின் மூர்க்கத்தனத்திற்கு அவர் பலியாகி விட்டாரா என்பதைத் தெளிவாக மக்கள் மன்றத்தில் விளக்குவதோடு, அவரது மரணம் குறித்த முறையான விசாரணை எவ்வித சமரசமுமின்றி நடைபெறுவதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


