வியர்வை சிந்தி நின்று அளித்த மனுவை நீரில் மிதக்கவிடுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியா?- நயினார் நாகேந்திரன்

 
nainar nainar

ஸ்டாலின் மக்கள் மனுக்கள் ஆற்றில் மிதக்கவிடப்படுவதைப் பார்த்து நடவடிக்கை எடுப்பாரா? அல்லது வழக்கம் போல விளம்பரங்களில் மூழ்கி அலட்சியம் காட்டப் போகிறாரா? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ச்

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “"உங்களுடன் ஸ்டாலின்" குறைதீர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதியில் கொட்டப்பட்டுள்ள சம்பவம் திராவிட மாடல் ஆட்சியின் அவல நிலைக்கான சாட்சி. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து நான்காண்டுகளாய் மக்கள் குறைகளைக் கண்டுகொள்ளாது இருந்துவிட்டு தேர்தல் பருவம் ஆரம்பமாகியதும், பெரும் ஆரவாரத்துடன் குறைதீர்ப்பு முகாம்களைத் துவக்கிய அறிவாலய அரசு, தற்போது, மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆற்றில் மிதக்கவிட்டு மக்கள் நலனில் தான் காட்டும் அக்கறையைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.


குறைகளைக் கேட்டறிய தலைவர்கள் வரும் போது திரை கட்டி கழிவு நீர் ஓடைகளை மறைப்பதும், குறைகளைச் சுட்டிக்காட்டி அளிக்கப்படும் மனுக்களை ஆற்றில் வீசியெறிவதும் தான் திராவிட மாடலின் குறைதீர்ப்பு லட்சணமா? தனது பணிகளை விட்டு வந்து, கூட்டத்தில் கால்கடுக்க, வியர்வை சிந்தி நின்று மனு அளித்தால், அதனை நீரில் மிதக்கவிடுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியா? மக்கள் வரிப் பணத்தை வாரி இறைத்து செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தனது பெயரை சூட்டி அழகு பார்க்கும் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்கள் மனுக்கள் ஆற்றில் மிதக்கவிடப்படுவதைப் பார்த்து நடவடிக்கை எடுப்பாரா? அல்லது வழக்கம் போல விளம்பரங்களில் மூழ்கி அலட்சியம் காட்டப் போகிறாரா? மக்களை அலைக்கழித்து அவமதிக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கே அதன் அழிவுக்கு அடித்தளமிடும்! இது உறுதி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.