செங்கோட்டையன் குருஜி என்றுதான் அழைப்பார்.... நெல்லையில் என்னை எதிர்த்து போட்டியிட போகிறாரா?- நயினார் நாகேந்திரன்
செங்கோட்டையன் அவர்களுக்கு என் மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. நான் நியாயமான ஒரு விஷயத்தை தான் சொன்னேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி பல்வேறு கட்சியினர் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் தலை நிமிர தமிழனின் நடைபயணம் என்ற பிரச்சாரத்தின் மூலம் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓரிக்கை பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களை கிராம சபை கூட்டம் போல் தின்னை போட்டு அமர்ந்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து வந்தார். இதில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜெகதீசன், ஓ பி சி மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பாஜகவினர் உடன் இருந்தனர்.
பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “2026 சட்டமன்றத்தில் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும் . 2026 ஆண்டு தேர்தல் நல்ல கூட்டணி என்பது சந்தோஷமான விஷயம் தானே. செங்கோட்டையனுக்கு என்மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை, நான் நியாயமான ஒரு விஷயத்தை தான் சொன்னேன். செங்கோட்டையன் இணைந்துள்ள கட்சி சிறிய கட்சி. இன்னும் வளர்ந்து வரவில்லை, எடுத்தவுடனே நாளைக்கு ஆட்சிக்கு வருவோம் என்று கூறுவது நியாயம் இல்லை என்று தான் கூறினேன். என்னைவிட மூத்தவராக செங்கோட்டையன் இருந்தாலும், அவர் என்னை குருஜி என்று அன்புடன் அழைப்பார். ஆனால் நான் தெரிவித்த கருத்தை அவர் மாற்றி புரிந்து கொண்டுள்ளார். ஒருவேளை செங்கோட்டையன் என்னை டெபாசிட் இழக்க செய்வார் என கூறுவது திருநெல்வேலியில் போட்டியிடுவாரா என்று எனக்கு தெரியவில்லை? திருப்பரங்குன்றத்தில் இருப்பது எல்லை கல்லா அல்லது தீபம் ஏற்றும் கல்லா என்று தெரியாமல் படித்திருந்தும் அறிவை பயன்படுத்தாதவர்கள் கூறுவது போல் உள்ளது” என தெரிவித்தார்.


