அண்ணாமலைக்கு ராஜ்ய சபா சீட்?- எல்.முருகன் பரபரப்பு பேட்டி

 
கண்டிஷனை ஒத்துக்கொள்ளாமல் நிதி மட்டும் கேட்டால் எப்படி?- எல்.முருகன்

அண்ணாமலைக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்குமா? என்ற கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "குடுப்பாங்கண்ணா, குடுப்பாங்கண்ணா" என்று பதிலளித்துச் சென்றார்.

எல் முருகன்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வந்தார். முன்னதாக அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழகம் எதிர்பார்க்கும் வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி பெறப் போகிறது. தமிழக மக்கள் எப்பொழுது தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று காத்திருந்தார்கள். அந்த கோபத்தின் வெளிப்பாட்டில்தான் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிக வாக்குப்பதிவு நடந்ததே கிடையாது. அந்த அளவுக்கு மக்கள் தி.மு.க., மீது கோபத்திலும் வெறுப்பிலும் உள்ளனர். மத்தியிலும் ஆட்சி, மாநிலத்திலும் ஆட்சி என்ற வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும், தி.மு.க.,வுக்கு மாற்று வேண்டும் என்றும் மக்கள் முடிவெடுத்து இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகளுக்காக நான்காம் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஹரியானா, மகாராஷ்டிராவில் ஆட்சி வராது என்று சொன்னார்கள். ஆனால் அதையும் தாண்டி மிகப்பெரிய வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றது. இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது. காத்திருப்போம், மாற்றம் வரப்போகிறது. ஊழல்வாதிகள் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை இந்தத் தேர்தலில்  பார்த்தோம். அதையெல்லாம் வைத்துத்தான் தி.மு.க.,வுக்கு எதிரான வாக்குகளை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அண்ணாமலைக்கு ராஜ்யசபா சீட் கிடைக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "குடுப்பாங்க, குடுப்பாங்கண்ணா" என்று பதிலளித்தபடி சென்றார்.