நாளை மறுநாள் மதுக்கடைகளை மூட வேண்டும்- அண்ணாமலை

அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசிடம் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ்தள பக்கத்தில், “சமூகத்தில், ஏற்றத்தாழ்வை நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்பதைப் போதித்த அய்யா வைகுண்டரின் 193 ஆவது அவதார தினம், வரும் மார்ச் 4 அன்று கொண்டாடப்படுகிறது. அய்யா வைகுண்டர் அவதார தினத்துக்காக, ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுடன், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் அதிகம் உள்ள தென்மாவட்டங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டத்துக்கும், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென்று, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், அன்பையும், ஆன்மீகத்தையும், வலியுறுத்திய அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று, மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் சார்பாக, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.