உண்டியல் கொள்ளை கும்பலின் தலைவர் சேகர்பாபு- அண்ணாமலை விமர்சனம்

 
அண்ணாமலை

வரும் பாராளுமன்றத் தேர்தலில், இந்த ஊழல் சந்தர்ப்பவாத மக்கள் விரோத திமுக கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணித்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியை மூன்றாவது முறையாகத் தொடரச் செய்வோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Image

இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்றைய என் மண் என் மக்கள் பயணம், தேனியில், எங்கு நோக்கினும் மக்கள் முகம் எனும் அளவுக்கு, திடமான மனதிற்கும் வீரத்திற்கும் பெயர்போன பெருந்திரளான மக்கள் கூடி, மிகச் சிறப்புடன் நடந்தது.

பெரிய குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார், 50,000 ஏக்கர் பரப்பளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சேலத்து மாம்பழத்திற்கு பிறகு தேனி மாம்பழம் மிகவும் பெருமை வாய்ந்தது. மேலும் பல பகுதிகளில் மொத்தம் 500 க்கும் மேற்பட்ட செங்கல் சூலைகள் இயங்கி வருகின்றன. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை போடி, வருஷநாடு, பெரியகுளம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் இலவம் சாகுபடி நடக்கிறது. கேரளாவில் இருந்து வியாபாரிகள் கொள்முதலுக்காக தேனி மாவட்டத்திற்கு அதிகளவில் வருகை தரும் சிறப்பு பெற்றது. 

Image

1952ஆம் ஆண்டு இந்த பெரியகுளம் தொகுதியில் இருந்து வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு சென்றவர் கல்வி தந்தை மூக்கையா தேவர் அவர்கள். ஆனால் அவர் அலங்கரித்த சட்டமன்ற உறுப்பினர் பதவியில் தற்போது, திமுகவை சேர்ந்த சரவண குமார் உள்ளார். இவர் மீது IPC SEC 171E லஞ்சம் வாங்கியதற்காக திருநெல்வேலி மூலக்கரைபட்டி காவல் நிலையத்தில் FIR உள்ளது. மூக்கையா தேவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தொகுதியில், இன்று ஒரு ஊழல்வாதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். தமிழகத்தில் அமைச்சர்களாக இருக்கும்  துரைமுருகன், நேரு, பெரியசாமி, பொன்முடி, MRK பன்னீர்செல்வம், KKSSR ராமசந்திரன், தங்கம் தென்னரசு, S ரகுபதி, KR பெரியகருப்பன், தா.மோ. அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன் என 11 பேர் மீது ஊழல் புகார் உள்ளது. இவர்கள் இருக்க வேண்டிய இடம் புழல் சிறை. ஆனால், சட்டமன்றத்தில் உள்ளனர். 

2G ஊழல் சம்பந்தமாக சிபிஐ ரெய்டுக்குப் பயந்து, முல்லைப் பெரியாறு திட்டத்தில் தமிழக நலனைத் தாரைவார்த்தவர் கலைஞர் கருணாநிதி. அவரது மகனான தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 30 மாதங்களாக பேபி அணையை சரி செய்கிறோம் என்று ஊரை ஏமாற்றி கொண்டிருக்கிறார் . தந்தை எவ்வழியோ மகனும் அவ்வழியே.இது தான் தமிழகத்துக்கு திமுகவின் தொடரும் துரோக வரலாறு. தேனி மாவட்டத்திற்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றைக் கூட திமுக நிறைவேற்றவில்லை. மக்கள் கேள்விகளை திசைதிருப்ப சனாதான தர்மத்தைத் தவறாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

Image

மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசில் 11 மகளிர் அமைச்சராக உள்ளனர். ஆனால் ஊழல் திமுக அரசில், வெறும் 2 மகளிர் மட்டுமே அமைச்சராக உள்ளனர். மோடி அவர்கள் அரசில், பட்டியல் இன சகோதர சகோதரிகள் 20 பேர் அமைச்சர்களாக உள்ளனர். ஊழல் திமுக அரசில் வெறும் 3 பேர் தான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். மோடி அரசு தமிழகத்திற்கு 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் வழங்கியது. 6 வது முறையாக ஆட்சியில் இருக்கும் ஊழல் திமுக அரசு தொடங்கிய மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை வெறும் 6. தூய்மை பணியாளர்களின் கால்களைக் கழுவி வணங்கி அவர்களை கௌரவப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. 1993 முதல் 2023 வரை தமிழகத்தில் மரணமடைந்த 225 தூய்மை பணியாளர்கள் பெருவாரியாக இறந்தது திமுக ஆட்சியில் தான். 

சிறுபான்மையினரான அப்துல் கலாம், பட்டியிலினத்தவரான ராம்நாத் கோவிந்த், பழங்குடியினரான திரௌபதி முர்மு அவர்களை ஜனாதிபதியாக்கியது மோடி அரசு. கலாம் என்றால் கலகம் என்று ஒரு சிறுபான்மையினர் சமுதாயத்தில் இருந்து வந்த நமது நாட்டின் ஏவுகணை மனிதர் என்று போற்றப்பட்ட விஞ்ஞானியை அசிங்கப்படுத்தியது திமுக. கடந்த ஆண்டு 16000 கோடி ரூபாய் பட்டியல் சமூக மக்களின் மேம்பாட்டுக்கு வழங்கியது மத்திய அரசு. அதில் 10000 கோடி ரூபாய் செலவிடாமல் வீணடித்தது ஊழல் திமுக. வேங்கைவயலில் மனித மலத்தை கலந்தவர்களை பல மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி வருவதுதான் திராவிடம். கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்தாலும், ஆ. ராசாவை, தனி தொகுதியில் தான் நிற்க வேண்டும், பொதுத் தொகுதிக்கு ஆசைப்படாதே என்று பெரம்பலூர் தொகுதியில் இருந்து நீலகிரி தொகுதிக்கு மாற்றியது, சனாதனமா போலி திராவிடமா? கூலி உயர்வு கேட்டு போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலார்களை கொன்றது சனாதனமா போலி திராவிடமா? 2G ஊழல் செய்து தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தியது சனாதனமா போலி திராவிடமா? இப்படி அடுக்கிக் கொண்டே போக முடியும்.

Image

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கத் தகுதியற்றவர் சேகர் பாபு. இந்து கோவில்களை புனரமைக்க 1000 கோடி ரூபாய் ஒதுக்குவோம் என்று சொன்னார்கள். இன்றைய தேதி வரை வெறும் 55 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. உண்டியல் கொள்ளை கும்பலின் தலைவரான சேகர் பாபுவுக்கு, தமிழக பாஜக கொடுத்த காலக்கெடு நாளையுடன் முடிகிறது. முல்லைப்பெரியாறு ஆணை தொடர்பாக போராட்டம் அறிவித்துவிட்டு சிபிஐ ரெய்டுக்கு பயந்து பின்வாங்கும் கூட்டமோ அல்லது, படுக்கையில் படுத்துக்கொண்டு 2 மணிநேர உண்ணாவிரதம் இருக்கும் கூட்டமோ அல்ல தமிழக பாஜக 11ஆம் தேதி மாநில அளவில் போராட்டம் நிச்சயம்.  வரும் பாராளுமன்றத் தேர்தலில், இந்த ஊழல் சந்தர்ப்பவாத மக்கள் விரோத திமுக கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணித்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியை மூன்றாவது முறையாகத் தொடரச் செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.