அரக்கோணம் கல்லூரி மாணவி புகார்- இதுவரை திமுக நிர்வாகி கைது செய்யப்படவில்லை: அண்ணாமலை

 
annamalai mkstalin annamalai mkstalin

அரக்கோணம் திமுக இளைஞரணி நிர்வாகியால் கல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கை, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “அரக்கோணம் திமுக இளைஞரணி நிர்வாகியால் கல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கை, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அரக்கோணம் கல்லூரி மாணவி, தான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார்.  மாணவி கொடுத்த புகாரின் கீழ், கடந்த 10 ஆம் தேதி அன்றே வழக்குப் பதிவு செய்ததாகக் கூறும் காவல்துறை, இதுவரை, திமுக இளைஞரணி நிர்வாகியைக் கைது செய்யவில்லை. மாறாக, மாணவி காவல்துறையிடம் கொடுத்த ஆதாரங்களை, திமுகவினர் சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகவும் மாணவி குற்றம் சாட்டியிருக்கிறார்.  


அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் தாக்குதலுக்கு ஆளான வழக்கில், மாணவி குறித்த தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டு அச்சுறுத்த முயற்சித்த திமுகவின் கீழ்த்தரமான செயல்பாடு, திமுகவினர் ஈடுபடும் அனைத்து பாலியல் குற்றங்களிலும் தொடர்கிறது என்பதையே இது காட்டுகிறது. இத்தகைய சூழலில், தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை” எனக் குறிப்பிட்டுள்ளார்.