வரிக்கு மேல வரியப் போட்டு, மூச்சு முட்டுது முதல்வரே!- பாஜக

சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழில்கள் மீது தொழில்வரி மற்றும் வணிக கட்டிடங்களுக்கான உரிமக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியுள்ளதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில், பால் விலை முதல் மின்சாரக் கட்டணம் வரை விலைவாசியை உயர்த்தி தமிழக மக்களின் குரல்வளையை நேரித்ததுதான் திராவிட மாடலின் அரும்பெரும் சாதனை. அந்தவகையில், வணிக நிறுவனங்களின் உரிமம் பெரும் கட்டணத்தை 150 சதவீதமாகவும், சிறிய கடைகளுக்கு குறைந்தபட்சம் 50 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டதன் விளைவாக, சிறு குறு தொழில்கள் முடங்கும் நிலை ஏற்படும் என்பதை தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் உணரவேண்டும்.
மேலும், தொழில்வரி உயர்த்தப்பட்டால், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் உயரும் அபாயம் உள்ளது. இத்தகைய பொருளாதார சரிவால், ஏழை எளிய மக்களும் நடுத்தரவர்க்க மக்களும் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல், மக்களுக்கான வரியை வரிசையாக உயர்த்திக் கொண்டு, மக்கள் வரிப்பணத்தில் கார் ரேஸ் நடத்துவதற்கான தேதியைக் குறித்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
எதிர்க்கட்சியாக இருக்கும்பொழுது விலைவாசியை எதிர்த்து தெருவில் இறங்கி போராடுவதும், பின்பு ஆளுங்கட்சியாக ஆட்சியில் அமர்ந்தபின் தொடர்ந்து விலைவாசியை உயர்த்தி, வரிச்சுமையில் தமிழக மக்களை திக்குமுக்காட வைப்பதுதான் திமுகவின் பரம்பரை பழக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.