#BIG NEWS : அதிர்ச்சியில் தவெக-வினர்..! 1 வாக்கு வித்தியாசத்தில் வென்ற தவெக எம்எல்ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை!

 
1

திருப்பத்தூர் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி சட்டமன்ற நம்பிக்கை வாக்கொடுப்பில் கலந்து கொள்ள கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக பெரியகருப்பன் போட்டியிட்டு ஒரு வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவசர வழக்கில், 'சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் பதிவான தபால் வாக்கு. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த வாக்கை அந்த தொகுதி தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். அதனால் அந்த வாக்கை மீட்டு, நான் போட்டியிட்ட தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பெயரில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில், "தேர்தல் முடிவுக்கு எதிராக தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியுமே தவிர, இதுபோல ரிட் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. அதனால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.

இதைத்தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டமும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளும் உறுதி செய் துள்ளன. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரு தொகுதியில் எண்ணப்பட்ட தபால் வாக்கை, வேறு தொகுதிக்கு அனுப்ப முடியாது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்ட தபால் வாக்கை பெற்று, மறு எண்ணிக்கை நடத்தக்கோரும் மனுக்கள் மீது முடிவெடுக்க தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் இல்லை.வழக்கமாக தபால் வாக்குகள், தொகுதி எண், பெயருடன்தான் அனுப்பப்படுகின்றன. அதனால் தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட் டுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதால், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜி.ராஜகோபாலன், தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டு விட்டதாக கூறுவது கற்பனையானது. தபால் வாக்கு தொகுதி மாறி அனுப்பப்பட்டுள்ளதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை" என்று வாதிட்டார்.

பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கில் என்.ஆர்.இளங்கோ, தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியுள்ளதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு. வாக்கு மாறி வந்தது குறித்து தேர்தல் அதிகாரியே தகவல் தெரிவித்திருக்கிறார். தபால் வாக்கு தொகுதி மாறி அனுப்பப்பட்டுள்ளது என்பதை தேர்தல் ஆணையம் மறுக்கவில்லை.

இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.இந்நிலையில் இன்று வழக்கு விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ., சீனிவாச சேதுபதிக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.தபால் வாக்கு, மின்னணு வாக்குகள் மற்றும் சிசிடிவி பதிவு ஆதாரங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் தவெகவின் 120 ஆதரவில் ஒன்று நாளை வாக்கெடுப்பின்போது குறையும். இருப்பினும் 118 தான் பெரும்பான்மை என்பதால் நாளை இந்த உத்தரவால் தவெகவுக்கு பிரச்சனை இல்லை.