#BIG BREAKING: கூண்டோடு ராஜினாமா செய்யும் சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள்..!!

 
Q

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பசுபதி நியமிக்கப்பட்டதில் இருந்து இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையாக சி.வி. சண்முகம் தரப்பைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட இணைச்செயலாளர் ஆனந்தி உள்ளிட்ட 11 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், நீக்கப்பட்ட நிர்வாகிகள் திண்டிவனம் விருந்தினர் மாளிகை எதிரே ஒன்றுகூடி, "எங்களை அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு நன்றி" என்று கூறி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிலையில், சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விலகல் கடிதம் அளிக்க ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சென்னைக்கு புறப்பட்டனர்.

அவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது