தமிழக அனுமதிச் சீட்டு பெறாத ஆம்னி பேருந்துகளை இயக்க தடை

 
ஆம்னி பேருந்துகள்

தமிழக பதிவெண் இல்லாமல் தமிழக அனுமதிச் சீட்டும் பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் வரும் வெள்ளி கிழமை முதல் தமிழகத்தில் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

ஆம்னி பேருந்துகளுக்கு முன்பதிவு  இன்று முதல் தொடக்கம்!

இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு (AITP) வழங்கப்படுகிறது. குறிப்பாக சுற்றுலா பயணிகளை யாத்திரை, திருமணம் சுற்றுலா இடங்களை பார்வையிடல் போன்ற காரணங்களுக்காக இந்த அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக  (AITP) அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு அனுமதி பெற்ற வாகனங்கள் பெரும்பாலும் வழங்கப்பட்ட அனுமதிக்கு உட்பட்டு செயல்படாமல் வேறு வகையில் செயல்படுகின்றன என்று போக்குவரத்து துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்பந்தத்தின் படி சுற்றுலா பயணிகளை சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாமல் பல இடங்களில் பயணிகளை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஏற்றி இறக்கி அல்லது தமிழ்நாட்டிற்குள் ஏற்றி இறக்கி பயணிகள் பேருந்துகள் போல் இயக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு எஸ்எம எஸ், இ டிக்கெட் மற்றும் ரெட்பஸ், அபீபஸ் போன்ற பல்வேறு பஸ் டிக்கெட் முன்பதிவு செயலிகள் மூலம் மின்னணு முறையில் டிக்கெட்களை வழங்குவதன் மூலம் தனிநபர்களிடமிருந்து தனித்தனியாக கட்டணத்தை வசூலித்து உள்ளனர்.


ஒரு மாநிலத்திலிருந்து பயணிகளை ஏற்றி சுற்றுலா வாகனம் போல் இயக்காமல் வெவ்வேறு மாநிலத்தில் பல இடங்களில் இறக்கிவிட்டுள்ளனர். அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் விதிகளுக்கு எதிராக சுற்றுலா திட்டம் ஒப்பந்தத்தின்படியும் பயணிகள் பட்டியலை மின்னணு அல்லது காகித வடிவில் பராமரிக்காமல் இயக்கியுள்ளனர். ஒப்பந்தத்தின்படி அவர்களின் திட்டமிட்ட பாதை மற்றும் தேதியை பின்பற்றாமல் இருந்துள்ளனர். அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு நிபந்தனைகளை மீறி மாநில அரசுக்கு கணிசமான வரிவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த ஊர்களுக்கு மட்டுமே ஆம்னி பேருந்து இயக்கம்..!

இந்த நிலையில் அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு கீழ் இயங்கும் சுற்றுலா வாகனம் எப்பொழுதும் சுற்றுலா பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும் என்றும் அதில் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகள் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம் பற்றிய விவரங்கள் இருக்கும் வகையில் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர்கள் சுற்றுலா பயணிகளின் பதிவுகளை பராமரிக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கான பயண விவரங்கள் மற்றும் இந்திய பதிவுகள் அதிகார வரம்பிற்குட்பட்ட போக்குவரத்து அதிகாரம் வேறு ஏதேனும் சட்ட அமலாக்க அதிகாரிக்கு தேவைக்கேற்ப சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மோட்டார் வாகனத்துறை மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் சிறப்பு சோதனை இடங்களிலும் மீதமுள்ள இடங்களில் காவல் சோதனை சாவடிகளில் சுற்றுலாப் பயணிகளின் விவரங்கள் தமிழ்நாட்டிற்குள் பயணத்திட்ட விவரங்கள் மற்றும் சுற்றுலா முடிவுறும் போது வெளியேறும் வழி ஆகிய விபரங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இவ்வகை அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற வாகனங்கள் தமிழ்நாட்டிற்கு உள்ளாகவே விதிகளை மீறி இயக்கப்படுவதை தடுக்கவும், இதனால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை கருத்தில் கொண்டும், விபத்துகள் நிகழும் போது காப்பீடு பெறுவதில் பயணிகளுக்கு சிரமங்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டும் இவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு போக்குவரத்து ஆணையரகம் சார்பில் இவ்வகை ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் கடந்த நவம்பர் மாதம் முதல் பல்வேறு கட்டங்களில் கூட்டங்கள் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மறுபதிவு செய்வதற்கான காலக்கெடு மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. ஆனால் மொத்தமுள்ள 652 அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற வாகனங்களில் 105 வாகனங்கள் மட்டுமே இதுவரை தமிழ்நாட்டில் மறுபதிவு செய்து TN என்று ஆரம்பிக்கும் பதிவெண் கொண்டு தமிழ்நாட்டிற்குள் இயங்குவதற்கு அனுமதி சீட்டும் பெற்றுள்ளனர். இறுதி காலக்கெடு மூன்று முறை நீட்டிக்கப்பட்ட பின்னரும் மீதமுள்ள 547 வாகனங்கள் விதிகளை மீறி தொடர்ந்து இயங்கி வருவதால் பொதுமக்களுக்கு மேற்கூறியவாறு சிரமம் ஏற்படுவது மட்டும் அல்லாமல் அரசுக்கும் தொடர்ந்து கணிசமான நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே இனி உரிய தமிழக பதிவெண் இல்லாமல் தமிழக அனுமதிச் சீட்டும் பெறாமல் உள்ள வாகனங்கள் 14.06.2024 (வெள்ளி கிழமை) 00.00 மணி முதல் இயங்குவதற்கு அனுமதிக்க பட மாட்டாது. எனவே முறையற்ற வகையில் வெளி மாநிலங்களில் பதிவு செய்து இயங்கும் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் இனி பயணிகள் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மீறி பயணம் செய்தால் அரசு அதற்கு பொறுப்பேற்காது என்பது மட்டும் அல்லாமல் இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அந்தந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று முறையாக சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அவர்கள் அதற்குரிய சான்றுகளை வாகன தணிக்கையின் போது காண்பிக்க வேண்டும்.