180 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கொடூர இளைஞன் அயன் அகமது கைது - புல்டோசர் கொண்டு வீடு இடிப்பு!
அமராவதி மாவட்டத்தில், 180-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 19 வயது இளைஞன் அயன் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 350 ஆபாச வீடியோக்களை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயங்கர குற்ற செயலை கண்டித்து அப்பகுதி மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதிகாரிகள் குற்றவாளியின் வீட்டின் ஒரு பகுதியை புல்டோசர் கொண்டு இடித்துத்தள்ளினர்.
விசாரணையில், வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் மூலம் சிறுமிகளை தொடர்பு கொண்டு, அவர்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, பின்னர் ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்ததாக தெரியவந்துள்ளது. இவன் பாதிக்கப்பட்ட சிறுமிகளை மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களுக்கும் அழைத்து சென்றுள்ளான்.
தற்போது இந்தக் குற்றவாளி ஏப்ரல் 21 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளங்கள் ரகசியமாக வைக்கப்படும் என உறுதி அளித்துள்ள போலீஸார், தைரியமாக முன்வந்து புகார் அளிக்குமாறு கேட்டு கொண்டுள்ளனர்.



