காவல்நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொடூர தாக்குதல்- 5 காவலர்கள் இடமாற்றம்

 
v v

தேனி தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் தாக்குதல் சம்பவத்தில் காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜன். இவர் கட்சிக்காரர் ஒருவருக்கு ஆதரவாக தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் ஆதாரத்திற்காக புகார் அளித்த தினமான 14-01-2025 அன்று காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் தனக்கு வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். அதனடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 14.01.2025 அன்று தேவதானப்பட்டி காவல் நிலையத்திலிருந்து வழக்கறிஞர் பாண்டியராஜனுக்கு சிசிடிவி காட்சிகள் வழங்கப்பட்டது. இதை ஆய்வு செய்தபோது, இளைஞர் ஒருவரை போலீசார் பிடித்து இழுத்து வந்து அடிப்பது போன்ற காட்சிகள் பின்னர் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரவியது. 

தற்போது இந்த சிசிடிவி வீடியோ குறித்து மாவட்ட காவல் துறை அளித்துள்ள செய்தி குறிப்பில், கடந்த ஜனவரி 14 ஆம் தேதி அன்று தேவதானபட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவர் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, அசிங்கமான செய்கைகள் செய்ததாகவும், தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரை கட்டுப்படுத்தி காவல் நிலையம் அழைத்து வந்ததாகவும் மேலும் அவர் மீது பிரிவு 296 (b) பிரகாரம் வழக்கு பதிவு செய்து பிணையில் விடுவிக்கப்பட்டதாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் காவல் நிலையத்தில் அவரை கட்டுப்படுத்தும் முயற்சியில் அவர் மீது அதிகப்படியான பலப்பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதால் , இது சம்பந்தமாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் அபூதுல்யா, மற்றும் காவலர்கள் மாரிச்சாமி, பாண்டி மற்றும் வாலி உள்பட 5 பேர் தேனி மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.