பீஹார் மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்?? - டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்..

 
dgp sylendra babu

பீகார் மாநில தொழிலாளர்களை தாக்குவது போன்று வெளியான வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ள டிஜிபி சைலேந்திர பாபு, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

அண்மையில்  தமிழகத்துக்கு வேலைக்காக வந்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற 2 வீடியோக்கள் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் குறித்து  கவலை தெரிவித்த பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், தமிழ்நாட்டில் உள்ள அம்மாநில அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, பீஹார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு  உத்தரவிட்டார்.  இந்த நிலையில், தொழிலாளர்கள் தாக்கப்படுவம்  வீடியோக்களுக்கு தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

வெளிமாநில தொழிலாளர்கள்

இதுதொடர்பாக  டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட வீடியோவில், “சமூக வலைதளங்களில் 2 போலி வீடியோக்கள் பரவி வருகிறது. அந்த வீடியோக்கள் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல காட்டப்பட்டுள்ளன. அந்த வீடியோக்கள் தவறானவை, போலியானவை. இரு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இருவேறு சம்பவங்களை திரித்து வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஒரு வீடியோ திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் இரு பிரிவாக மோதிக் கொண்டது ஆகும். மற்றொரு வீடியோ கோவையில் உள்ளூர்வாசிகள் மோதிக் கொண்டது ஆகும். இதுதான் உண்மை தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.