ஏடிஎம் கொள்ளையர்கள் : 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை முடிவு..
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேரை 7 நாள் காவலில் விசாரிக்க தனிப்படை முடிவு செய்துள்ளது.
திருவண்ணாமலையில் கடந்த 12-ம் தேதி 4 ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹரியாணா மாநிலம் மேவாத் பகுதியைச் சேர்ந்த 6 கொள்ளையர்கள், ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து அதிலிருந்த ரூ.73 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களை தேடும் பணி தீவிரமாக நடிபெற்று வந்தது. இந்தநிலையில், ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் தலைவர் முகமது ஆரிப், ஆசாத் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர்.
தற்போது அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் , மீதம் ரூ.70 லட்சத்தின் நிலை குறித்து தெரியவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட மேலும் 3 பேரின் அடையாளம் தெரிந்துள்ளதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்தது. அவர்களைப் பிடிக்க, தனிப்படையினர் ஹரியாணா மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே, ராஜாஸ்தான் கொள்ளையர்கள் 2 பேரை, ஹரியாணா மாநிலத்தில் வைத்து ஜீப்புடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடிக்கும் தனிப்படையின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது ஆரிப், ஆசாத் ஆகியோரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.