இனி சட்டமன்ற நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படும் - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்..!
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 18ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் உரை நிகழ்த்துகிறார். அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும். இதில் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் உறுப்பினர்கள் பங்கேற்று பேசுவர்.
த.வெ.க ஆட்சி அமைத்த பிறகு, தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் ஜூன் 18-ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ள நிலையில், பெரும் விவாதமாக மாறியுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் குறித்துச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முக்கியக் கருத்தைப் பகிர்ந்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதிய அரசின் முதலாவது சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, சமீபகாலமாக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி வரும் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் என்ன நடக்கும் என்பது ஆளுநர் உரை நிகழும்போது உங்களுக்கே தெரியும்; சற்றே பொறுத்திருந்து நீங்களே பாருங்கள்" எனச் சஸ்பென்ஸ் வைக்கும் விதமாகப் பதிலளித்துள்ளார்.
மேலும் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையாகப் பார்த்த தமிழக மக்கள், இனிவரும் காலங்களிலும் அவையின் அனைத்து நடவடிக்கைகளையும் அதிகமாகப் பார்க்க விரும்புகின்றனர் என்றும், குறிப்பாக இளம் தலைமுறையினரின் இந்த ஆவலைப் பூர்த்தி செய்ய உரிய நேரத்தில் முழுமையான நேரலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுவரை அரசியலில் நேரடித் தொடர்பில்லாமல் இருந்து, தற்போது தங்களது விருப்பப்படி புதிய ஆட்சியைத் தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்திய அமைச்சர்களும், முதலமைச்சரும் அவைக்குள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்ட சபாநாயகர், அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சட்டமன்ற நேரலைக்கான பணிகள் சரியான நேரத்தில் முறைப்படி மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

