தமிழக பாஜக பொறுப்பாளாராக மீண்டும் அரவிந்த் மேனன் நியமனம்..

 
தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன்


 தமிழக பாஜக பொறுப்பாளராக மீண்டும் அரவிந்த் மேனன் நியமிக்கப்பட்டுள்ளார். 

நாடு முழுவதும் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 5ம் தேதி ( ஜூலை) பாஜக பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் புதுச்சேரியின் பாஜக பொறுப்பாளராக நிர்மல் குமார் சுரானா நியமனம் செய்யப்பட்டிருந்தார்.  தமிழ்நாட்டில் மேலிட பொறுப்பாளராக அரவிந்த் மேனன் உள்ள நிலையில், அப்போது வெளியான பொறுப்பாளர்கள் நியமன பட்டியலில் தமிழ்நாடு  இடம்பெறவில்லை. அத்துடன் தமிழ்நாடு பாஜக இணை பொறுப்பாளராக இருந்த சுதாகர் ரெட்டி , கர்நாடக மாநில இணை பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.  

பாஜக உத்தரவு

தமிழ்நாடு குறித்த அறிவிப்பு இடம்பெறாமல் இருந்ததும், இணை பொறுப்பாளர் மாற்றப்பட்டது பேசுபொருளாகியிருந்த நிலையில், நேற்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக மீண்டும் அரவிந்த் மேனன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல் இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டியே மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.  இந்த அறிவிப்பில் தமிழகம் மட்டுமின்றி அசாம், சண்டிகர், லட்சத்தீவு, ராஜஸ்தான், திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் லட்சத்தீவு மேலிட பொறுப்பாளராகவும் அரவிந்த் மேனன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.