“ECR-ல் அந்த காரை பிடிடான்னு அவரு சொன்னாரு... அதனால் தான் பெண்களை மடக்கி பிடிச்சேன்”- கைதானவர் வாக்குமூலம்
கானாத்தூரில் பெண்கள் காரை நள்ளிரவில் துரத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய நபரின் பகீர் வாக்குமூலம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தவறுதலாக பெண்களின் காரை துரத்தி சென்றதாகவும், பிறகு மன்னிப்பு கேட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த கானாத்தூரில் நள்ளிரவில் பெண்களின் காரை துரத்திய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் சந்தோஷ், தமிழ் குமரன், அஷ்வின், விஷ்வேஸ்வர், முக்கிய நபர் சந்துரு ஆகிய ஐந்து பேரை இதுவரை கானாத்தூர் போலீசார் செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் முக்கிய நபரான சந்துரு வாக்குமூலம் அளிக்கக்கூடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவத்தன்று தனது கார் ரிப்பேர் ஆனதால், எழும்பூரில் உள்ள கடையில் வாங்க சென்றதாகவும், அதன் பின்னர் இரண்டு காரில் கல்லூரி மாணவர்களுடன் தானும் சந்தோஷும் கடற்கரைக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
"அந்த காரை பிடிடான்னு அவரு சொன்னாரு.. அதனால் தான் பெண்களை மடக்கி பிடிச்சேன்.. ஆனா அங்க நடந்தது இது தான்.. இதுக்காக தான் அந்த கட்சி கொடியை காரில் பொருத்தினோம்.." ECRல் காரில் சென்ற பெண்களை வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சொன்ன பரபரப்பு வாக்குமூலம்...!… pic.twitter.com/7TtkJJjbI0
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) February 2, 2025
பின்னர் முட்டுக்காடு பகுதிக்கு சென்ற போது அங்கே தனது காரை இடித்து சென்றுவிட்டதாக சந்தோஷ் கூறியதின் பேரில் தான் அந்த பெண்களின் காரை துரத்தி சென்று பிடிக்க முற்பட்டு வீடு வரை சென்றதாகவும், அங்கு சென்ற பின்பு தவறான காரை துரத்திவிட்டதாக சந்தோஷ் தெரிவித்ததால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றதாகவும் கைதான சந்துரு வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும் கூடிய விரைவில் கொடைக்கானல் செல்ல உள்ளதால் அங்கு வரக்கூடிய டோல்களில் பணம் கொடுக்காமல் செல்வதற்காக திமுக கொடியை கடந்த ஜனவரி 10ஆம் தேதி பொறுத்தியதாகவும், தனது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் எனவும் சந்துரு வாக்குமூலம் அளித்துள்ளார்.


