ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளருக்கு கைது வாரண்ட்
ரூ.26 கோடி காசோலை மோசடி வழக்கில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என்.ராமசாமிக்கு ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் 1976ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பல்வேறு படங்களை தயாரித்து வருகிறது. இதனை இயக்குநர் ராம நாராயணன் நிறுவி நிர்வகித்து வந்தார். அவரது மறைவுக்கு பின் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அவரது மகனும் தயாரிப்பாளருமான என். ராமசாமி நிர்வகித்து வருகிறார். கடைசியாக இந்நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படம் வெளியாகியிருந்தது. அதன்பின்னர் படத்தயாரிப்பில் ஈடுபடாத தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மீது மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மாலிக் ஸ்டிரிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் புகார் அளித்தது. ரூ.15 கோடி மோசடி செய்ததாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
ரூ.26 கோடி காசோலை மோசடி வழக்கில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என்.ராமசாமிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 3ம் தேதிக்குள் கைது செய்து எழும்பூர் பெருநகர மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.


