ஆம்ஸ்ட்ராங் கொலை: தேமுதிக பிரமுகரிடம் கிடுக்குப்பிடி விசாரணை..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிக பிரமுகரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழகில் தொடர்புள்ளதாக, கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், திமுகவை சேர்ந்த அருள், சிவசக்தி, தமாகவை சேர்ந்த ஹரிஹரன், அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, பாஜக பிரமுகர் அஞ்சலை உள்ளிட்ட 15 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்களில், காவலர்களை தாக்கிவிட்டு தம்பிக்க முயன்றதாக கூறி திருவேங்கடம் என்பவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டார்.
அடுத்தடுத்து பல ரவுடிகள் கைதாகி வரும் நிலையில், அவர்களுக்கு திமுக, பாஜக, அதிமுக போன்ற கட்சிகளின் பிரமுகர்களாக இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ரவுடிகள் பெரிய அளவில் திட்டம் தீட்டி இந்த படுகொலையை அரங்கேற்றியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அடுத்தடுத்த கைதுகளுக்கு பின்னரே சென்னையில் ரவுடிகளின் ஆதிக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூரைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகி மணிகண்டனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவரை கைது செய்யவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மணிகண்டன் மட்டுமின்றி ஜல்லிமேடு பகுதியை சேர்ந்த ஒருவர், வழக்கறிஞ்சர்கள் வேலாயுதம், பிரபாகரன் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர் விசாரணையில் மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.