பகுஜன் சமாஜ் மாநில தலைவர் பதவியை ஏற்க ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மறுப்பு

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் பதவியை ஏற்க ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்த நிலையில் தற்போது உள்ள சூழலில் கட்சி பதவியை ஏற்க விரும்பவில்லை என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி கூறியதாக தெரிகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி இரவு பெரம்பூரில் உள்ள புதிதாக கட்டப்பட்டு வரும் அவரது வீட்டின் அருகே வைத்து மர்ம கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, திருனின்றவூர் பா.ஜ.க நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி, தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞரணி துணைத் தலைவர் ஹரிஹரன், அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு கழக பகுதி துணைச் செயலாளர் மலர்கொடி, சதீஷ் ஆகிய 14 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசாரை தாக்க முயன்ற சம்பவத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த நிலையில் வட சென்னை பாஜக மகளிரணி துணை செயலாளரான அஞ்சலை தலைமறைவாக இருப்பதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.