ஆம்ஸ்ட்ராங் கொலை: ‘என் கணவரையும் என்கவுன்டர் செய்ய திட்டம்’ - பிரபல ரவுடியின் மனைவி பரபரப்பு புகார்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி நாகேந்திரனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, அவரது மனைவி தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழகில் தொடர்புள்ளதாக, கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் காவலர்களை தாக்கிவிட்டு தம்பிக்க முயன்றதாக கூறி திருவேங்கடம் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இந்த நிலையில், இந்த கொலை வழக்கில், பிரபல ரவுடி நாகேந்திரனுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், நாகேந்திரனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் , உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் அவரது மனைவி விசாலாட்சி தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில், தனது கணவர் 24 ஆண்டுகளாக சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக பொய் தகவல்கள் பரப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரவுடி திருவேங்கடத்தைப் போன்று, தனது கணவரையும் என்கவுன்டர் செய்ய காவல் துறை முடிவு செய்திருப்பதாக பகீர் தகவலையும் விசாலாட்சி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவர் நாகேந்திரனை மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை அழைத்து வர இருப்பதாகவும், அப்படி வரும் போது, என்கவுன்டர் செய்ய காவல் துறை திட்டமிட்டு இருப்பதாக விசாலாட்சி குற்றம் சாட்டியிருக்கிறார். நாகேந்திரன் மனைவி அளித்துள்ள இந்த மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.