அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் ராகுல் காந்தியுடன் சந்திப்பு!!
அகஸ்தீஸ்வரத்தில் 2-வது நாளான இன்று ராகுல் காந்தி நடை பயணத்தை தொடங்கிய நிலையில் அனிதா குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளார்.
காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி அகில இந்திய அளவில் கட்சியை வளப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடைய செய்யவும் பாரத் ஜோடா யாத்ரா என்று இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார். கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் நுழைவாயில் இருந்து நடை பயணத்தை முதல்வர் மு.க .ஸ்டாலின் நேற்று தேசிய கொடியை வழங்கி தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த நடைபயணம் கேரளா கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ,ராஜஸ்தான், உத்தர பிரதேசம், அரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீர் சென்று அடைகிறது . மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3, 500 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
காந்தி நினைவு மண்டபம் முன்பாக தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் 600 மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் நிறைவடைந்தது. பின்னர் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்துக்கு சென்ற ராகுல் காந்தி அங்குள்ள கேரவனில் தங்கி ஓய்வெடுத்தார். இரண்டாவது நாளான இன்று அகத்தீஸ்வரத்தில் இருந்து ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்கினார். இந்நிலையில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் தந்தை மற்றும் அவரது சகோதர் ஆகியோர் ராகுல் காந்தியை சந்தித்தனர். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்களை அறிமுகம் செய்து வைத்த நிலையில் அவர்களும் ராகுல் காந்தியுடன் பாத யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.