சேலம் மக்களா நீங்கள்..? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..! வெறும் 58 பைசா வட்டியில் கடனுதவி!
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்ததாவது: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது.
மேலும், இக்கழகம் மூலம் பி.வ, மி.பி.வ (ம) சீ.ம. மாணவ மாணவியர்களுக்கு வெளிநாட்டுக் பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கப்படுகிறது. தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் பெறவிரும்பும் விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5.00 இலட்சத்திற்கு மிகாமலும், 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகம் / வணிகம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிக பட்சமாக ரூ.25.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் ரூ.1.25 இலட்சம் வரை 7% மற்றும் ரூ.1.25 இலட்சம் முதல் ரூ.25.00 இலட்சம் வரை 8% ம் ஆகும். கடனைத் 3 முதல் 6 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.
மேலும், குழுக் கடன் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறு தொழில் / வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25.00 இலட்சம் வரையும், ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.
கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 2 % முதல் 3 ஆண்டுகள் ஆகும். இக்கடன் பெறுவதற்கு சுய உதவிக் குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இரு பாலருக்கான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.60,000/- வீதம் 2 கறவை மாடுகள்
வாங்க அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 7% மற்றும் திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள் ஆகும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இக்கழக இணையதள முகவரியில் (http://tabcedco.net) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
குறிப்பாக, விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், (அறை எண்.110), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி கடனுக்கான விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினராக (சாதிச் சான்றிதழ்) இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (கிராமம் / நகர்ப்புறம் பாகுபாடின்றி) (வருமானச் சான்றிதழ்). மாநில அரசின் வருமானச் சான்றிதழ் வழங்கும் தகுதி வாய்ந்த அலுவலரால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். (அல்லது) வர்த்தமானி பதிவு பெற்ற அலுவலரால் (Gazette officer) சான்றளிக்கப்பட்ட சுய சான்றளிக்கப்பட்ட ஆண்டு குடும்ப வருமானச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டிற்கு 8 சதவீத வட்டி விகிதமாகும்.
விண்ணப்பதாரர் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் படிப்புகள், பிஎச்டி, முதுகலை பட்டப்படிப்புகள் போன்றவற்றில் முதுகலைப் படிப்புகளுக்கு, பொருத்தமான அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட தேர்வு மதிப்பெண் (SAT, GMAT, GRE) அல்லது பாடநெறியில் சேருவதற்குப் பொருந்தக்கூடிய பிற தொடர்புடைய மதிப்பெண்கள் போன்றவை பெற்றிருக்க வேண்டும். (சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து சேர்க்கை / சலுகை கடிதத்தை பெற்றிருக்க வேண்டும்) (IELTS அல்லது TOEFL போன்ற முற்றிலும் மொழித் திறன் தேர்வை அடிப்படையாகக் கொண்டதல்ல).
மேலும், கடன்கள் வழங்கப்படும் பாடத்தின் வகை மற்றும் காலத்தைப் பொருட்படுத்தாமல் மாணவர்களிடமிருந்து மீளப்பெறுவதற்கான தடைக்காலம் 5 ஆண்டுகளாக ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடனை திரும்ப செலுத்தும் காலமான மாணவர்களிடமிருந்து அதிகபட்சமாக மீட்கும் காலம் 10 ஆண்டுகள் ஆகும். அதாவது 5 வருட தடைகாலம் உட்பட அதாவது கடன் வழங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள் கடனை முழுவதுமாக திருப்பி செலுத்தப்பட வேண்டும். மேலும், முன்கூட்டியே செலுத்தப்படும் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கிய பிறகு, எப்போது வேண்டுமானாலும் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். இதற்கான முன் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. குறிப்பாக, விண்ணப்பப் படிவம் டாப்செட்கோ இணையதள முகவரில் (http://tabeedoo.net) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், (அறை எண்.110), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, சேலம் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

