ஊட்டிக்கு சுற்றுலா போறீங்களா..? அப்போ இதை தெரிஞ்சிக்கிட்டு போங்க.. புது ரூல்ஸ் வந்தாச்சு..!
நீலகிரியில் நடைபெறும் கோடை விழா என்பது தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் தேசிய சுற்றுலா அமைச்சகத்தால் ஆண்டுதோறும் மே மாதத்தில் சிறப்பாக நடத்தப்படும் நிகழ்வாகும். இது சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது.
இந்நிலையில் கோடைவிழாவை முன்னிட்டு முக்கிய போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.சுற்றுலா நகரமாக விளங்கும் உதகையில் அதிகமான மக்கள் வருகை மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதன்படின்வரும் மே 1ஆம் தேதி காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை உதகை நகருக்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் வாகனங்களுக்கு மட்டும் இந்த கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அசம்பாவீதங்கள் மற்றும் விபத்துகள் ஏற்பட அதிக அளவில் வாய்ப்பு உண்டு. இதனால் போக்குவரத்து நெரிசல், சாலை சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு சவால்கள் ஏற்படக்கூடும் என்பதால் முன்கூட்டியே இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நகரில் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக காவல்துறை சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போக்குவரத்து மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள் வாகன ஓட்டிகளுக்கு முன்கூட்டியே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.கோடைவிழாவை முன்னிட்டு உதகை நகரம் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், மலர் கண்காட்சிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த நிகழ்வுகள் நடைபெற உள்ளதால், மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாகவே இந்த போக்குவரத்து கட்டுப்பாடும் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

