ஓடும் ரயிலில் தொங்கியவாறு ரீல்ஸ்-க்காக வீடியோ எடுப்பவரா நீங்கள்..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!
சமீபகாலமாக, இளம் தலைமுறையினரிடம் 'ரீல்ஸ்' மோகம் அதிகரித்துள்ளது. ஓடும் ரயிலில் கைப்பிடி கம்பிகளை பிடித்து 'ஸ்டைல்' காட்டுகின்றனர். இதனால் கடைசி நேரத்தில் ரயிலை பிடிக்க வரும் பயணிகளும், படிக்கட்டில் ஏறும்போது விபத்துகளை சந்திக்கின்றனர்.
சேலம் கோட்டத்தில் கடந்த ஐந்து மாதத்தில், 268 வழக்குகள் இவ்வாறு விதிமீறியதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் பெருபாலானோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர். போத்தனுார், கோவை ரயில்வே ஸ்டேஷன்களில் மட்டும் 13 வழக்குகள் பதிவாகியுள்ளன.
சிறை தண்டனை ரயில்வே பாதுகாப்பு படையினர்(ஆர்.பி.எப்.,) கூறுகையில், 'ரீல்ஸ்' மோகத்தில் ரயில் வரும்போது தண்டவாளம் அருகே நின்று, ஓடும் ரயிலில் படியில் நின்று ஆபத்தான முறையில் வீடியோ எடுக்கின்றனர். அது அவர்களுக்கே ஆபத்தாக முடிகிறது. கூட்டம் இல்லாத சமயத்திலும் படிக்கட்டு கைப்பிடியை பிடித்து பயணிக்கின்றனர். இதுபோன்ற விதிமீறில் ஈடுபட்டால், ரூ.1,000 அபராதம் அல்லது ஆறு மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். சேலம் கோட்டத்தில் 94 ஸ்டேஷன்கள் உள்ளன. விதிமீறியதாக இந்த ஸ்டேஷன்களில் கடந்த ஐந்து மாதத்தில் 268 வழக்குகள் பதியப்பட்டுள்ளன' என்றனர்.

