'பொள்ளாச்சி, திருச்செந்துாரில் போதைப்பொருள் எதிர்ப்பு பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் - அண்ணாமலை..!

 
annamalai

வீ தி லீடர்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:

தமிழகத்தில், 10 முதல் 75 வயது வரை உள்ளவர்களில் 18 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர்.

'மதுவில் இருந்து என்னை மீட்டெடுங்கள்' என்று உதவி தேடும் நபர்களின் எண்ணிக்கையில், தமிழகம் மூன்றாமிடத்தில் உள்ளது. எனவே, நம் அமைப்பில் உள்ள 19 லட்சம் பேரும், ஜூலை மாதம் முழுக்க, போதைக்கு எதிரான விழிப்புணர்வு முன்னெடுப்பை மேற்கொள்ள உள்ளோம். 'மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும்; போதை இல்லாத தமிழகம் உருவாகட்டும்' என்ற முழக்கத்தோடு வேலையை தொட ங்குவோம்.

ஜூலை முதல் வாரத்தில், 'நான் போதை பொருளை பயன்படுத்த மாட்டேன்' என்று, தங்கள் குடும்பத்திற்குள் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

இரண்டாம் வாரம், நாம் வசிக்கும் பகுதியில் சிறு குழுக்களாக பிரிந்து, 100 பேரிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.

மூன்றாம் வாரம், மாரத்தான், யோகா போன்ற பொது நிகழ்ச்சிகளை, இளைஞர்கள், இளம்பெண்கள் நடத்த வேண்டும்.

இறுதி வாரத்தில், மிகப்பெரிய சமுதாய இயக்கமாக முன்னெடுத்து, உறுதிமொழி எடுக்க வேண்டும். இதனிடையே, ஜூலை 12ம் தேதி பொள்ளாச்சியிலும், 26ம் தேதி திருச்செந்துாரிலும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.