அண்ணாமலையின் அடுத்த மாநாடு சென்னையில் ..?

 
annamalai

‘வீ த லீடர்ஸ்’ தலைவர் அண்ணாமலை, ஏற்கனவே கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முதலாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள நிலையில், இரண்டாவதாகச் சென்னையில் ஆகஸ்ட் மாதம் மெகா மாநாட்டை நடத்த ‘வீ த லீடர்ஸ்’ நிர்வாகிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

முன்னதாகப் பொள்ளாச்சி மாநாட்டில் பேசிய அண்ணாமலை, தூத்துக்குடியில் அடுத்த கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். இருப்பினும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் தூத்துக்குடி/திருச்செந்தூர் மாநாடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே, வரும் ஜூலை 26-ஆம் தேதி திருச்செந்தூர் சுற்றுவட்டாரக் கடலோர கிராமங்களைத் தூய்மைப்படுத்தும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பணிகளில் அண்ணாமலை நேரடியாகப் பங்கேற்கவுள்ள நிலையில், அடுத்த முக்கிய நிகழ்வாகச் சென்னையில் மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி சென்னை சிவானந்த சாலையில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி கோரி, அண்ணாமலையின் ஆதரவாளரும் முக்கிய நிர்வாகியுமான கரு. நாகராஜன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாகக் கடிதம் அளித்துள்ளார். பொள்ளாச்சியில் ‘போதையில்லா தமிழகம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்ற நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் ‘குற்றச் சூழல் விழிப்புணர்வு’ (Crime-free environment awareness) என்ற முதன்மை தலைப்பில் அண்ணாமலை உரையாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் மாதம் ஒரு முக்கிய சமூகப் பிரச்சினை கையில் எடுத்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம், சென்னையில் கூட்டத்தை நடத்துவதன் மூலம் மாநிலத் தலைநகரிலும் தனது ஆதரவுத் தளத்தை மேலும் வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தலைநகர் சென்னையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களைத் திரட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாடு, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் அண்ணாமலையின் அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்பட்டு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.