துணை ஜனாதிபதி பதவிக்கு ஒரு தமிழர் வந்தால் சந்தோஷம் தான் - அண்ணாமலை விருப்பம்!

 
1 1

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை , 

குரூப் 4 தேர்வில் தமிழ் மொழி சார்ந்த கேள்விகள் சில, பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படவில்லை என்றார். "டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 200 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப்படுகிறது. அதில் 100 கேள்விகள் தமிழ் மொழி சார்ந்த கேள்விகளாகும். இவற்றில் Syllabusல் இல்லாத தனிச்சையான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

சில தேர்வு மையங்களில் வினாத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த முறையும் சரியில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். "தேர்வு முறையாக நடைபெறவில்லை, தேர்வு நடந்து முடிந்த பிறகு பாதுகாக்கும் முறையும் சரியாக இல்லை எனக் கூறுகிறோம்" என்று அண்ணாமலை கூறினார்.

துணை ஜனாதிபதி பதவிக்கு ஒரு தமிழர் வந்தால் சந்தோஷம் என்று அண்ணாமலை தெரிவித்தார். "உடல்நல குறைவு காரணமாக துணை ஜனாதிபதி பதவியை ஜெகதீப்தங்கர் ராஜினாமா செய்துள்ளார். நல்லவர் யார் தேர்வு செய்யப்பட்டாலும் எங்களுக்கு மகிழ்ச்சி தான். அதிலும் ஒரு தமிழர் வந்தால் சந்தோஷம்தான்" என்று அவர் கூறினார்.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நடை சாற்றிய பிறகு உயர் அதிகாரி ஒருவர் திறக்க வைத்து வழிபாடு செய்துள்ளார். இது தவறு என்றும், சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார். "பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடை சாற்றிய பிறகு, உயர் அதிகாரி என்பதால் திறக்கப்பட்டு வழிபாடு செய்துள்ளார். இதில் தொடர்புள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வற்புறுத்தி திறக்க வைத்த உயர் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது என்று அண்ணாமலை தெரிவித்தார். கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. பலர் முறையாக வாடகை செலுத்தவில்லை. இது குறித்து எச். ராஜா தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. "கோவில் நிலத்தில் உள்ள சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது, முறையாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிட்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.

தமிழகத்தின் தனிநபர் வருமானம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மற்ற மாநிலங்களின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று அண்ணாமலை கூறினார். "தனிநபர் வருமானத்தில் தமிழகம் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மற்ற இடத்தில் உள்ள மாநிலங்களின் வளர்ச்சிக்கும் நமக்கும் இடைவெளி குறைந்து வருகிறது. உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் அதிகமாக வளர்ந்து வருகின்றன" என்று அவர் குறிப்பிட்டார்.

மதுரையில் உள்ளாட்சி வரி முறைகேடு நடந்துள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் சிறப்பு புலனாய்வு அமைப்பு மூலம் உள்ளாட்சி முறைகேடுகளை ஆராய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார். மேலும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது உண்மை என்றும் அவர் கூறினார்.