இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வைஷாலி, பிரக்ஞானந்தாவுக்கு வானதி சீனிவாசன், அண்ணாமலை வாழ்த்து

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த செல்வி. வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா இருவருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பிரிட்டனில் நடைபெற்ற FIDE கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை செல்வி. வைஷாலி அவர்களுக்கு தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெற உள்ள கேண்டிடேட் செஸ் தொடரில், விளையாடத் தகுதி பெற்றுள்ள உலகின் முதல் சகோதர சகோதரி இணை என்ற பெருமையும் படைத்துள்ள வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா இருவரும், உலக அரங்கில் மேலும் பல சாதனைகள் படைத்து, நம் நாட்டையும், நம் அனைவரையும் பெருமைப்படுத்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவிற்கு பெருமை சேர்த்த செல்வி. வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா இருவருக்கும் வாழ்த்துக்கள்! பிரிட்டனில் நடைபெற்ற பிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி. மேலும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் செஸ் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்ற முதல் சகோதர-சகோதரி ஜோடியாக இருவரும் சாதனை படைத்துள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.