பள்ளியை இடித்துவிட்டு மண்டபம்! மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்- அண்ணாமலை

 
annamalai

சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பங்காரு தெருவில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளியை இடித்துவிட்டு, அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்டும் ஆணை பிறப்பித்ததுடன் அதற்கான பணியை சென்னை மாநகராட்சி முழு வீச்சில் தொடங்கியுள்ளது. இதற்கு அப்பகுதி மக்க எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். 

School

இந்நிலையில் திமுகவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சென்னை திருவல்லிக்கேணி பங்காரு தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளிக் கட்டிடத்தை இடித்துவிட்டு, திருமண மண்டபம் கட்டப் போவதாக, நாளிதழில் வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் உள்ள இந்தப் பள்ளியில் 115 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 


தமிழகத்தில் சுமார் பத்தாயிரம் சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடங்களை இடித்து, புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்படும் என்று அறிவித்துவிட்டு, அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பள்ளிகளுக்கான இடத்தில், வணிக வளாகங்களை அமைக்கும் எண்ணம் இருந்தால், அது வன்மையான கண்டனத்துக்குரியது. உடனடியாக, இந்தப் பள்ளி மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் சிதிலமடைந்த பள்ளிகள் அனைத்திற்கும், அதே இடத்தில் புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றும், மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.