பாதி மகளிருக்கு ரூ.1,000 பணம் வராது- அண்ணாமலை

 
அண்ணாமலை

தமிழகத்தில் உள்ள 1.25 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் கிடைக்காது. இங்கே இருக்கும் பாதி மகளிருக்கு இந்த திட்டத்தில் பணம் வராது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். 

Image

இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்றைய என் மண் என் மக்கள் பயணம் முடிமலை, அழகர்மலை, கரந்தமலை என மூன்று மலைக்குன்றுகளின் நடுவே அமைந்துள்ள நத்தம் நகரில், மக்கள் ஆரவாரத்துடன் நடைபெற்றதில் மகிழ்ச்சி. தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று திண்டுக்கல் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது. மதுரை மற்றும் நத்தம் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க 7.3 கிமீ, தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலத்தை 613 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு வழங்கியது. இதை நமது பாரத பிரதமர் இந்த வருடம் ஏப்ரல் மாதம் திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த 1159 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது நமது மத்திய அரசு. மாம்பழ சாகுபடிக்கு பெயர்போனது நம் நத்தம். சுமார் 7000 ஏக்கர் பரப்பளவில் செந்தூரம், நீளம், அல்போன்சா, இமாம்பசந்த் வகை மாம்பழங்கள் இங்கே விளைவிக்கப்படுகிறது. சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் புளி சாகுபடி நடக்கிறது. திருப்பூருக்கு அடுத்தபடியாக ஆயத்த ஆடைகள் தயாரிப்பில் நத்தம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Image

நத்தம் கணவாய் போர் போன்ற நமது வீர வரலாறு நமது பாடப் புத்தகங்களில் இடம் பெறாதது வருத்தம். ஆற்காடு நவாப்புக்கு எதிரான வீரப்போரில் நம் மக்கள் வெற்றி பெற்றதன் சான்றாக அடிக்கல் நாட்ட வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக இருக்கிறது. அடிப்படையில் நாம் அனைவரும் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நமக்குள்ளே எந்தப் பிரிவினையும் இல்லாது, அனைத்துச் சமூகமும் ஒற்றுமையாகச் சேர்ந்து, மத்திய அரசிடம் வலியுறுத்தி, நமது கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக பாஜக துணை நிற்கும்.

நத்தம் தொகுதிக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான நத்தம் அரசு கலைக் கல்லூரி, நத்தம் ஆயத்த ஆடை தொழில் பூங்கா, மா, புளி உள்ளிட்ட வேளாண் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு அரசின் நேரடி கொள்முதல் நிலையம், நத்தம் மாம்பழக் கூழ் தொழிற்சாலை என ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. மத்திய அரசு செய்ய வேண்டிய பணிகளை மத்திய அரசு கவனத்துக்குக் கொண்டு சென்று நிறைவேற்றுவோம். திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக பாஜக தொடர்ந்து வலியுறுத்தும். 

a

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பால் விலையை 25 சதவீதம் ஏற்றிவிட்டார்கள். ஆவின் 1 லிட்டர் நெய் விலை 515 ரூபாயாக இருந்தது இன்று 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மின்சார கட்டணம் 15 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சொத்துவரி 50 சதவீத உயர்வு. பத்திரப்பதிவு கட்டணம் 60 முதல் 500 சதவீதம் உயர்வு. குடிநீர் வரி உயர்வு. இதை சமாளிக்கத் தான் மகளிர் உரிமைத் திட்டம் என்ற பெயரில் 1000 ரூபாய். ஆனால் அதுவும் அனைத்து மகளிருக்கும் இல்லை. தமிழகத்தில் உள்ள 1.25 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் கிடைக்காது. இங்கே இருக்கும் பாதி மகளிருக்கு இந்த திட்டத்தில் பணம் வராது. திமுக ஆட்சியின் விலை ஏற்றத்தை சமாளிக்கவே இந்த 1000 ரூபாய் திமுகவின் மகளிர் உரிமைத் திட்டம். 

மக்கள் விரோத, குடும்ப ஆட்சிக் கூட்டணியான, ஊழல் திமுக கூட்டணியை, வரும் பாராளுமன்ற தேர்தலில் முழுமையாகப் புறக்கணிப்போம். தமிழகத்துக்கு பல நலத்திட்டங்கள் கொண்டு வந்த பிரதமர் மோடி நல்லாட்சி தொடர, தமிழகம் வாக்களிப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.