ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பார்;அவர் குற்றவாளி இல்லை- அண்ணாமலை

 
annamalai

நாளை நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீட் தேர்வு தமிழகத்திற்கு அவசியம் என்பதை பாஜக சார்பாக வானதி சீனிவாசன் எடுத்துரைப்பார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி பா.ஜ.கவில் இணைகிறாரா? - அண்ணாமலை விளக்கம்

பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பஞ்சாப் அரசு செயல்பட்டதாக பாஜகவினர் பஞ்சாப் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சி.கே.சரஸ்வதி ஆகியோர் தமிழக ஆளுனர் ஆர்.என். ரவியை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து இது குறித்து மனு அளித்தனர்.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக குற்றம்சாட்டி தங்களது ஆதங்கத்தை ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு தெரிவித்திருக்கிறார். ராஜேந்திர பாலாஜிக்கு உதவி செய்ததாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டார். அவர்கள் ராஜேந்திரபாலாஜி எதற்காக உதவி செய்தார்கள் என்பதற்கான விளக்கத்தை பாஜக நிச்சயம் கேட்கும், ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பார். நீதிமன்றம் செல்லும் வரையில் ஒரு நபர் குற்றவாளி இல்லை. ஒமிக்ரான் பரவல் காரணமாக பிரதமரின் தமிழக பயணம் ரத்தாகி உள்ளது. பிரதமர் தமிழகம் வரும் போது கம்பீரத்தோடு வர வேண்டும், தொற்று பரவல் குறைந்த பின்னர் அவர் மீண்டும் தமிழகம் வர வருவார்

நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் பங்கேற்பார். தமிழகத்திற்கு நீட் தேர்வின் அவசியம் என்பதை அவர் எடுத்துச் சொல்வார். நீட் விவகாரம் தொடர்பாக ஆளுநர் காலம் தாழ்த்தவில்லை, ஆளுநர் முடிவு எடுப்பதற்கான கால அவகாசத்தை, கொடுக்க வேண்டும். ஆளுநர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதால் அரசியல் செய்ய வேண்டாம்.” எனக் கூறினார்.