பேருந்தில் ஏற்பட்ட ஓட்டையால் கீழே விழுந்து படுகாயமடைந்த பெண் - அண்ணாமலை கடும் கண்டனம்

 
Annamalai

போக்குவரத்துத் துறையில் என்னென்ன விதங்களில் ஊழல் செய்யலாம் என்று சிந்திக்கும் அமைச்சர், அரசுப் பேருந்துகளைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை திருவேற்காட்டில் இருந்து, வள்ளலார் நகர் செல்லும் தடம் எண் 59 பேருந்தில், இருக்கையில் அமர்ந்திருந்த சகோதரி ஒருவர், இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து, ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து கீழே விழுந்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். தமிழகத்தில் திமுக அரசு நிர்வாகம் என்ன நிலைமையில் செயல்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.


சரியாகப் பராமரிக்கப்படாத பேருந்துகளால், மழைக் காலங்களில் பேருந்திற்குள் தண்ணீர் ஒழுகுவது, பழுதடைந்த இருக்கைகள் என, அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் இன்று போக்குவரத்துத் துறை முற்றிலுமாகச் செயலிழந்து இருக்கிறது. போக்குவரத்துத் துறை மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழக அரசுத் துறைகளும் இதைப் போன்ற பரிதாப நிலையில்தான் இருக்கின்றன.  மக்களின் வரிப்பணம் முழுவதும் எங்கு செல்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. போக்குவரத்துத் துறையில் என்னென்ன விதங்களில் ஊழல் செய்யலாம் என்று சிந்திக்கும் அமைச்சர், அரசுப் பேருந்துகளைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.