பாஜக மாநில செயற்குழு கூட்டத்துக்கு காளையுடன் வந்த அண்ணாமலை

 
அண்ணாமலை

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் நாயினர் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அண்ணாமலை தனது காளையை அழைத்து வந்தார். மேலும் மண்டபத்திற்கு பாஜக கட்சியினர் அழைத்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளை பார்வையிட்டார். மேலும் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க கண்காட்சியை அண்ணாமலை பார்வையிட்டார். பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, பாஜக நிர்வாகிகள் பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். 

Image

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகள் வெற்றிகரமாக மக்களுக்கு சேவை செய்துவிட்டு, பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அதை வருகின்ற மே 30 ம் தேதி முதல் ஜீன் 30 ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு பாஜக கொண்டாட உள்ளது. பிரதமரின் சாதனைகள், அதனால் தமிழகத்திற்கு கிடைத்த பயன்கள், மக்கள் எப்படி முன்னேறி உள்ளார்கள், அரசின் திட்டங்கள் பட்டி தொட்டி எல்லாம் எவ்வாறு சென்றுள்ளது என்பதை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் ஒரு மாத காலம் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும்.
 

அண்ணாமலை


பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு கூட்டத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்துள்ளனர். நானும் எனது காளையை கொண்டு வந்துள்ளேன். அதற்கு காரணம் நேற்று உச்ச நீதிமன்றம் சரித்திரம் வாய்ந்த தீர்ப்பை பிரதமர் மோடியின் முழு முயற்சியால் வழங்கியுள்ளது. அதனைக் கொண்டாட ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வந்துள்ளோம். டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு. டாஸ்மாக்கில் தறிகெட்டு ஓடும் குதிரை போல எல்லா பக்கமும் மது ஓடிக் கொண்டிருப்பதை கட்டுப்படுத்த வேண்டும். திமுக அரசு தமிழகத்தை குடிகார மாநிலமாக்குவதை கட்டுப்படுத்த வேண்டும். டாஸ்மாக்கை கட்டுப்படுத்தினால், கள்ளச்சாரயம் கட்டுப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.