அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு அனிதாவின் பெயர் - முதலமைச்சர் அறிவிப்பு

 
anitha

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு, நீட் தேர்வை எதிர்த்து போராடி தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் பெயரை சூட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. ஆனால் நீட் தேர்வால் கிராமபுற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இன்று வரை தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இருந்த போதிலும் மத்திய அரசு நீட் தேர்வு விவகாரத்தில் உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில், நீட் தேர்வை எதிர்த்து போராடிய அரியலூர் மாணவி அனிதா 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு 'அனிதா' பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரியலூர் மருத்துவ கல்லூரியில் 22 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு 'அனிதா' பெயர் சூட்டி முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அனிதா நினைவு அரங்கம் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.