2026ல் பாமக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

 
anbumani

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்து இட்டு முழுமையாக சட்டமாக மாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

Charak' pledge regressive: Anbumani

திருவள்ளுர் கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு மாவட்ட பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் வேலப்பன்சாவடியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட செயலாளர் கே.என்.சேகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து முடிக்கவில்லை. மழைநீர் வடிகால்வாய், மழைநீரை பாதுகாத்து தேக்கி வைக்க வேண்டும், சென்னையை சார்ந்த ஏரிகளை தூர்வாரி அதிக கொள்ளளவு கொண்ட ஏரிகளாக மாற்ற வேண்டும் என்று பலமுறை கூறி வருகிறோம் அந்த வேலைகள் நடக்கவில்லை. புழல், போரூர், ரெட்டை ஏரிகளில் கழிவுகள் கலந்து வருகிறது. சென்னைக்கு புதிதாக பத்து ஏரிகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு ஏரியும் ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரியாக உருவாக்க வேண்டும். மொத்தம் பத்து டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஏரிகளை உருவாக்க வேண்டும். இன்னும் 15 ஆண்டுகளில் மழை நின்று விடும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். அதற்கு ஏற்ப நீர் நிலைகளை நாம் உருவாக்க வேண்டும். இரண்டு கட்சிகளும் அடுத்த தேர்தலை பற்றி தான் சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலம் நிலுவையில் உள்ளது அதனை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும் இந்த சாலை இல்லாத காரணத்தால் இன்னும் தொழிற்சாலைகள் அதிக அளவில் இங்கு வர தயக்கம் காட்டுகின்றனர்.

மெட்ரோ ரயில் திட்டத்தை ஆவடி வரை நீட்டிக்க வேண்டும். கொசஸ்தலை ஆற்றில் ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கருணை உள்ளத்தோடு அரசு அணுக வேண்டும். 2026ல் பாமக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அரசு சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது அதற்கு ஆளுநர் இன்னும் கையெழுத்து இடாமல் உள்ளார். இதற்கு முன்பு அவசர சட்டத்தை கொண்டு வந்தார்கள், அதற்கு ஆளுநர் கையெழுத்து இட்டார். தற்போது இந்த மசோதாவிற்கு
கையெழுத்து இட்டு முழுமையான சட்டமாக மாற்ற வேண்டும்” என தெரிவித்தார்.